நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Friday, January 27, 2012

நான் என்பதே நீயல்லவா - 18

உத்ரா சரணின் புகைபடத்திடம் தினமும் மானசீகமாக பேசுவதும், தன் ஆசைகளை சொல்வதும் வாடிக்கையானது. நிச்சயநாள் என்று வரும் எப்போது அவனை பார்ப்போம் என்று காத்திருக்க ஆரம்பித்தாள். எதை எதிர்பார்க்கிறோமோ அது அவ்வளவு சுலபத்தில் நடப்பதில்லை.அதுபோலவே நாட்களும் நகர்வேனா என்று ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது.

நிச்சயத்திற்கு புடவை எடுப்பது, மண்டபம் பார்ப்பது, அனைவரையும் அழைக்க செல்வது, மூன்று பெண்களுக்கும் காவலாய் கடைவீதிக்கு அழைத்து செல்வது என எப்போதும் விக்கி அந்த ஐந்து நாட்களாய் கீர்த்தி வீட்டிலேயே இருக்க , விஜியும், உத்ராவும் அவனை கேலி செய்தே வதைத்துகொண்டிருந்தனர். விஜியும் இவர்களுக்கு துணையாய் கீர்த்தி வீட்டில் தான் இருந்தாள். விக்கியும், விஜியும் தூங்குவதற்கு மட்டுமே அவரவர் வீட்டிற்கு சென்றனர். மற்ற நேரமெல்லாம் கீர்த்தி, உத்ராவுடன் தான்.


விஜிக்கு ஒரு ஒரத்தில் வருத்தமிருந்தாலும், மகிழ்ச்சியாகவே இருந்தாள். சரண் மனைவியாய் தன் தோழி தன் வீட்டிற்கு வரபோகிறாள் என்ற சந்தோஷம் ஒரு புறம் இருக்க, உத்ரா ரிஷியை விரும்பவில்லை என்ற மகிழ்ச்சி தான் அவளை துள்ளிகுதிக்க வைத்தது. நிச்சய வேலைகளில் பாதியை அவளே எடுத்து செய்தாள்.அவ்வபோது ரிஷியை பற்றி மறைமுகமாக உத்ராவிடம் கேட்பாள். உத்ராவிடமிருந்து மறந்து கூட ரிஷிபற்றி ஒரு வார்த்தை வராது , ஏமாந்துபோவாள்.


நிச்சயத்திற்கு என்று மூன்று பெண்களுக்கும் ஒரே மாதிரியான சேலைகள் எடுக்கப்பட்டது. தனக்கு வேண்டாம் என்று விஜி எவ்வளவோ மறுத்தும் வற்புறுத்தி வாங்கி தந்தனர்.புடவை எடுக்க, நகை எடுக்கவென்று எப்போது குடும்பத்தோடு கிளம்பினாலும் இவர்களுடன் இன்னுமொரு தம்பதிகள் வருவார்கள். விஜியோ, விக்கியோ யாரென்று கேட்டால் உத்ரா குடும்பநண்பர்கள் என்று மட்டும் சொல்லுவாள் , வேறு எதுவும் அதிகம் அவர்களை பற்றி சொல்லமாட்டாள்.

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிச்சய நாளும் வந்தது. இரு பெண்களின் நிச்சயம் என்பதால் வீட்டில் வைக்காமல் ஒரு சின்ன மண்டபத்தில் நிச்சயத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.மண்டபம் தொலைவு என்பதாலும், காலையில் 10.00 மணிக்கே நிச்சயம் என்பதாலும் முந்தின நாள் இரவே அனைவரும் மண்டபத்தில் தங்கிவிட்டனர்.


எப்போதும் போல் சரணின் புகைப்படத்திடம் பேசிகொண்டிருந்த உத்ராவை தொலைபேசி தொல்லை செய்ய கோபத்தோடு யார் அழைப்பது என்று பார்த்தவள் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து தான் போனாள். சரணின் மொபைலிருந்து அழைப்பு வந்திருந்தது. விஜி தானாகவே சரணின் நம்பரை உத்ராவிற்கு பதிவு செய்து கொடுத்திருந்தாள். ஆனால், உத்ரா தான் ஏதோ தயக்கத்தில் அவனிடம் இதுநாள் வரை பேசவில்லை. இன்று அவனிடம் இருந்து அழைப்பு வரவும் கனவா நிஜமா என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். மறுமுறை அடிக்கவே அவசரமாக அதை எடுத்தவள், படபடக்கும் இதயத்தோடு அதை காதிற்கு கொடுத்து

"ஹலோ.." என்றாள். மறுபக்கதிலிருந்து பதில் வராமல் போகவே மறுமுறை ஹலோ ஹலோ என

"ம்.. கொ..கொஞ்சம் மாடிக்கு வா.." என்று விட்டு அவள் பதிலுக்காக காத்திருக்காமல் போனை வைத்துவிட்டான்.

'இல்லை வேண்டாம் எதுவாக இருந்தாலும் போனிலேயே சொல்லுங்கள் என்று சொல்லவந்தவள்' அவன் போனை வைத்துவிடவும் அப்படியென்ன அவசரம் என செல்லமாய் மனதினுள் கடிந்து கொண்டாள். எதற்காக கூப்பிட்டு இருப்பான்...... சரி.... எப்படியும் அவனுக்கு இந்த திருமணத்தில் சம்மதமா என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேனே அதையாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போதே ஒரு மனம் சம்மதமில்லாமலா நிச்சயம் வரை வந்திருக்கும் என்று இடிதுரைத்தது. ஏதே ஏதோ கற்பனைகளோடு மாடிக்கு சென்றாள். சரண் அங்கு இவளுக்கு முதுகை காண்பித்தபடி நின்றிருந்தான். அவள் வந்திருப்பதை அறிவிக்க தொண்டையை செறுமினாள். அவன் திரும்பி இவளை பார்த்தான்.

அவனது கண்களிலிருந்த சிவப்பும், முகத்திலிருந்த வியர்வை முத்துகளும், அவளை நோக்கி வந்த ஒருவித வாடையும் சொல்லியது, அவன் மது அருந்தியிருக்கிறான் என்று. அதிர்ச்சியானாள் இவன் குடிப்பானா? இல்லை யாரெனும் வற்புறுத்தி குடிக்க வைத்திருப்பார்களா?, இந்த நேரத்தில் அதுவும் இந்த நிலையில் தன்னை எதற்காக இங்கு அழைத்தான் என்று தன் சிந்தித்து கொண்டிருந்தவளை சரணின் குரல் நினைவுலகுக்கு கொண்டுவந்தது.

"என்ன நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ ஒன்னும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்"

"என்ன கேட்டீங்க"

"அத கூட காதுகொடுத்து கேட்கலயா?"

"இல்ல எதோ யோசனை அதான்.....நீங்க பேசினது கேட்கல"

"அப்படியென்ன யோசனை இந்த குடிகாரனுக்கு பதிலா அந்த............ யாரவன்....... ரிஷி.........ரிஷி..... அவனயே கல்யாணம் பண்ணிகலாம் னா?"ஆழ்மனதிலிருந்த கோபமோ இல்லை உள்ளே சென்ற மதுவின் வேலையோ தன்னையும் அறியாமல் அவளை வார்த்தைகளால் தாக்கினான்.

" சரண்..............." கிட்ட தட்ட கத்தினாள்.

"சரண் தான்......... எப்படி டி உங்களால முடியுது ........ ஒருத்தன காதலிக்கவும்.... இன்னோருத்தன கல்யாணம் பண்ணிக்கவும்......... கேவலமா இல்ல......."

அதற்குமேல் அவளால் அங்கிருக்க முடியவில்லை, விடு விடுவென படியிறங்கி சென்றுவிட்டாள். அவர்கள் அறைக்கு சென்றாள். அனைவரும் உறங்கியிருந்தனர். தனது இடத்தில் அமர்ந்தவள் அதற்கு மேல் தாங்காது என்பதை போல் சத்தமின்றி அழ ஆரம்பித்தாள். இந்த பத்து நாட்களில் எத்தனை கணவு கண்டிருப்பாள், எவ்வளவு கோட்டைகள் கட்டி இருப்பாள், அத்தனையும் அத்தனையும் ஒரு ஐந்து நிமிடத்தில் சுக்குநூறாய் உடைந்ததை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.


காலையில் நிச்சயம் என்ன செய்ய போகிறேன்?. கல்யாணம் என்பதற்கு அடிப்படையே நம்பிக்கை தான், அது இல்லாதவனோடா இனி வாழ்கையை வாழ போகிறேன், இல்லை மாலை இந்த மண்டபதிற்குள் நுழையும் போது பெற்றவர்களின் கண்களில் கண்ட சந்தோஷத்தை அழித்து தன்னை பற்றிய கலக்கத்தை கொண்டுவரபோகிறேனா? என்ன செய்ய போகிறேன்?....... கடவுளே எனக்கு மட்டும் ஏன் ஒரு சந்தோஷத்தையும் கொடுத்தை அதை அனுபவிக்க முடியாத படி ஒரு துன்பத்தையும் கொடுத்துவிடுகிறாய்......... இப்படியெல்லாம் மனதில் அரற்றியபடி தன்னையும் அறியாமல் உறங்கி போனாள்.

No comments: